சிவகாசி: சிவகாசி அருகே பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட வழக்கில், குழந்தையின் பெற்றோர், செவிலியர்கள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சிவகாசி அருகே மாரனேரி ஈஸ்வரன் காலனியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் (28). இவரது மனைவி பஞ்சவர்ணம் (24). இருவரும் பட்டாசு ஆலையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 7, 5, 3 வயதுடைய 3 மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஜனவரி 23-ம் தேதி இவர்களுக்கு நான்காவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
பஞ்சவர்ணம் மாரனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்கு செல்லும்போது செவிலியர் முத்துமாரி மற்றும் ஒப்பந்த செவலியராக பணியாற்றிய நாகர்கோவிலைச் சேர்ந்த அஜிதா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. பஞ்வர்ணம் குழந்தையை விற்பதற்கு முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து திருநெல்வேலியைச் சேர்ந்த ஜார்ஜ், சார்லட் ஐடின் தம்பதிக்கு குழந்தையை விற்பதற்காக அஜிதா, தாமரை மற்றும் அவர்களது உறவினர் பேச்சிமுத்து ஆகியோர் உதவியுள்ளனர். பாண்டீஸ்வரன் தனது குழந்தையை கொடுக்க ரூ.3 லட்சம் பணம் கேட்டுள்ளார்.
இந்நிலையில், பிப்.19-ம் தேதி பாண்டீஸ்வரன், பஞ்சவர்ணம் ஆகியோர் திருநெல்வேலி சென்று ஜார்ஜ் தம்பதியினரிடம் ரூ.70 ஆயிரம் என பேசி முடித்து விட்டு, குழந்தையை கொடுத்து விட்டு ரூ.40 ஆயிரம் பெற்று திரும்பினர். பஞ்சவர்ணத்தின் தாய் குழந்தையை விற்றது குறித்து மாரனேரி போலீஸில் புகார் அளித்தார்.
» 6 வயதாகும் குழந்தைகளையே ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்
» மத்திய அரசு ஒதுக்கிய சமக்ரஹ சிக்ஷா திட்ட நிதி என்ன ஆனது? - தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து எஸ்.ஐ காசியம்மாள் விசாரணை நடத்தி பாண்டீஸ்வரன், பஞ்சவர்ணம், தாமரை, செவிலியர்கள் முத்துமாரி, அஜிதா ஆகியோரை கைது செய்தார். ஜார்ஜ், பேச்சிமுத்து ஆகியோரை தேடி வருகின்றனர்.