சேலத்தில் மொத்த வியாபார மளிகை கடையில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சாம்பல்

By வி.சீனிவாசன்

சேலம்: சேலம் சாமிநாதபுரம் பகுதியில் மொத்த வியாபார மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

சேலம், சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். அதே பகுதியில் குடோன் அமைத்து மளிகைப் பொருட்கள் மற்றும் மசாலா பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு திடீரென மளிகை குடோனில் இருந்து கரும்புகை வெளியானதை, அருகில் இருந்தவர்கள் பார்த்து செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வருவதற்குள் குடோனில் தீ மளமளவென பற்றி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், மளிகைப் பொருட்கள் என்பதால் தீ கொழுந்து விட்டு எரிந்த நிலையில், பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள், தீயை முற்றிலும் அனைத்தனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள், மசாலா வகைகள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தீ விபத்துக்கு வேறு காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் தொடர் விசராணையில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE