மும்பை அருகே காதலியை கொன்று உடலை மறைத்து வைத்த காதலன் கைது

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே, பல்கார் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய நகரம் நலசோபரா. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மேகா டோர்வி (37) என்ற செவிலியரும் அவரது காதலர் ஹர்திக் ஷா (30) என்பவரும் கடந்த 20 நாட்களுக்கு முன் குடிவந்துள்ளனர்.

இந்நிலையில் அண்டை வீட்டில் வசிப்பவர்கள் அளித்த தகவலின் பேரில் இவர்களது வீட்டை போலீஸார் கடந்த திங்கட்கிழமை சோதனையிட்டனர். இதில் படுக்கை அறையில், படுக்கைக்கு அடியில் உள்ள பெட்டியிலிருந்து மேகாவின் உடலை கைப்பற்றினர். இதையடுத்து அவருடன் வசித்த ஹர்திக் தப்பிச் செல்வதை அறிந்த போலீஸார் அவரை, மத்திய பிரதேச மாநிலம் நாக்டா ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மடக்கிப் பிடித்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘ஹர்திக் – மேகா இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர். 6 மாதங்களாக சேர்ந்த வாழ்ந்த இவர்கள் சமீபத்தில் இங்கு குடிவந்துள்ளனர். ஹர்திக் வேலையில்லாமல் இருந்த நிலையில் வீட்டு செலவுகளை மேகா மட்டுமே கவனித்து வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறு முற்றியதில் மேகாவை ஹர்திக் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்’’ என்றனர்.

டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் காதலர்கள் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது இன்றைய காலக்கட்டத்தில் அதிகரித்துள்ளது. இதில் இவருக்கு இடையில் தகராறு ஏற்படுவதும் இதில் காதலனால் காதலி பரிதாபமாக கொல்லப்படுவதும் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE