சேலத்தில் மனைவியின் ஆண் நண்பரை கொலை செய்த வழக்கு - கணவர் உள்பட மூவருக்கு ஆயுள் தண்டனை

By வி.சீனிவாசன்

சேலம்: சேலத்தில் மனைவியின் ஆண் நண்பரை கொலை செய்த வழக்கில் கணவர் உள்பட மூவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5,500 அபராதம் விதித்து சேலம் முதலாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது.

சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த கூலி தொழிலாளி தங்கவேல் (45). இவரது மகள் பிரியங்கா. மகன் நந்தகுமார். பிரியங்கா சங்ககிரி அருகே உள்ள ஓட்டலில் பணியாற்றி வந்தார். பிரியங்காவுக்கு சரத்குமார் என்பவருடன் திருமணமானது. கணவர் சரத்குமாருடன் பிரியங்கா தனியாக வசித்து வந்தார். ஓட்டலில் வேலை பார்த்து வந்த பிரியங்காவுக்கும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

பார்த்திபன் சங்ககிரி அருகே உள்ள கிரானைட் கம்பெனியில் வேலை பார்த்துவந்த நிலையில், அடிக்கடி ஓட்டலுக்கு சென்று, பிரியங்காவுடன் நெருங்கி பழகி வந்தார். இதைஅறிந்த பிரியங்காவின் கணவர் சரத்குமார் பார்த்திபனை கண்டித்தும், இருவரும் பழக்கத்தை தொடர்ந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2020-ம் செப்டம்பர், 4ம் தேதி பார்த்திபன் குடிபோதையில் பிரியங்காவின் வீட்டுக்கு சென்று, அவரிடம் தகராறு செய்தார். இதில் கோபமடைந்த சரத்குமார், பிரியங்காவின் தந்தை தங்கவேல், தம்பி நந்தகுமார் மூவரும் பார்த்திபனை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில், தங்கவேல், சரத்குமார், நந்தகுமார் மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த கொலை வழக்கு விசாரணை சேலம் முதலாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட தங்கவேல், சரத்குமார், நந்தகுமார் மூவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ரூ.5 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE