இலங்கையிலிருந்து ராமேசுவரத்துக்கு கடத்தி வந்த தங்கத்தை கடலில் தூக்கி எறிந்த கடத்தல்காரர்கள்

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: இலங்கையில் இருந்து படகில் கடத்தி வந்த தங்கத்தை ராமேசுவரம் அருகே கடலில் தூக்கி எறிந்தது தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் இருந்து மண்டபம் கடற்பகுதிக்கு படகு மூலம் ஏராளமான தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, கடலோரக் காவல்படையின் ஹோவர் கிராஃப்ட் ரோந்து படகில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர்.

மண்டபம் தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் ரோந்து படகை பார்த்ததும் பைபர் படகில் இருந்த 3 பேர் ஒரு பார்சலை கடலில் தூக்கி எறிந்தனர். இதையடுத்து, படகில் இருந்த 3 பேரையும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது 3 பேரும் இலங்கையில் இருந்து தங்கத்தைக் கடத்தி வந்ததாகவும், மண்டபம் தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் கடலில் எறிந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து மன்னார் வளைகுடா கடலில் வீசிய தங்கம் கொண்டுவந்த பார்சலை கடலோரக் காவல்படையின் ஆழ்கடல் நீச்சல் பிரிவு வீரர்கள் மண்டபம் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், கடத்தலில் தொடர்புடைய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

தெற்கு மன்னார் வளைகுடா கடலில் கடத்தல்காரர்களால் தூக்கி எறிந்த தங்கத்தை தேடும் பணியில் ஈடுபட்ட கடலோர காவல்படை வீரர்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE