ஆந்திராவில் இருந்து 160 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு 

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஆந்திராவில் இருந்து 160 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில் இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆந்திராவில் இருந்து இருவர் 160 கிலோ கஞ்சா கடத்தி வருவதாக சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, சென்னை மாதவரம் அருகே ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். இந்த சோதனையில் 8 மூட்டைகளில் கடத்திவரப்பட்ட 160 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இந்த கடத்தலில் ஈடுபட்ட கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ரங்கநாதன், வேலூரைச் சேர்ந்த செல்வம் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.திருமகள், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் அளவு சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறி, இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE