சென்னையில் பள்ளி அருகே 8 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்: பிஹாரைச் சேர்ந்த நபர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாம்பலம் பகுதியில் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்த நபரை கைது செய்துள்ள காவல்துறையினர், அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 1 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னைப் பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, மாம்பலம் (R-1)காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் துறையினர் இன்று (ஜன.19) காலை, மாம்பலம், வி.என்.ரோட்டில் உள்ள பள்ளி அருகே கண்காணித்தபோது, அங்கு ஒருவர் இருசக்கர வாகனத்தில் வைத்து போதை தரும் கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த சுரேந்திரன் யாதவ்

அதன்பேரில் மேற்படி இடத்தில் கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்திரன் யாதவ் (43) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட சுரேந்திரன்யாதவ் ராயப்பேட்டை பகுதியில் பீடா கடை நடத்தி வரும் தனது மாமா அமுல்குமார் யாதவ் என்பவருடன் சேர்ந்து பீகார் மாநிலத்திலிருந்து கஞ்சா சாக்லேட்டுகளை வரவழைத்து சென்னையில் விற்பனை செய்தது தெரியவந்தது. மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகி உள்ள அமுல்குமார் யாதவ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட சுரேந்திரன்யாதவ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE