புதுச்சேரி பாகூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை: போலீஸ் விசாரணை

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உடலை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே உள்ள அரங்கனூர் சுடுகாட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக பாகூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே எஸ்பி ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் கணேசன், சப் - இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், விஜயகுமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

தகவலறிந்து புதுச்சேரி சட்டம் - ஒழுங்கு சீனியர் எஸ்பி தீபிகா மற்றும் ரெட்டிச் சாவடி போலீஸாரும் அங்கு வந்தனர். விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே கீழ் குமாரமங்கலம் காளியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த தமிழ் (எ) தமிழசரன் (32) என்பதும், பிளம்பர் வேலை செய்து வந்த அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

பின்னர் தமிழரசன் உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பாகூர் போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட தமிழரசன் ஏற்கெனவே ஒரு கும்பலுடன் பழகி வந்துள்ளார். பிறகு அவர்களுடன் பிரச்சினை ஏற்படவே, அங்கிருந்து விலகி மற்றொரு கும்பலுடன் சேர்ந்து அவர்களுக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளார். இதனால் முன்விரோதம் ஏற்பட்டுள்ளதுடன், நாளுக்கு நாள் வலுத்துள்ளது.

இந்நிலையில், வீட்டிலிருந்த தமிழரசனை அப்பகுதியை சேர்ந்த கூட்டாளிகள் மூன்று பேர் காணும் பொங்கலை கொண்டாட இரவு அழைத்துச் சென்று மது குடித்துள்ளனர். பின்னர் அவரை வேறொரு இடத்தில் அடித்து கொலை செய்துவிட்டு, அரங்கனூர் சுடுகாட்டில் உள்ள புதரில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இருப்பினும் முழுமையான விசாரணைக்கு பிறகே கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும் என போலீஸார் தரப்பில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE