அரச குடும்ப உதவியாளர் எனக் கூறி டெல்லி நட்சத்திர ஓட்டலில் 40 நாட்கள் தங்கிய மோசடி நபர்!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: யுஏஇ அரச குடும்ப உதவியாளர் எனக் கூறி 4 மாதங்கள் டெல்லியில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் கட்டணமே செலுத்தாமல் தங்கிவந்த நபர் திடீரென மாயமானார். அதன் பின்னரே அவர் ஏமாற்றியதை உணர்ந்த ஓட்டல் நிர்வாகம், அவர் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளது. அந்த நபர் ரூ.23 லட்சம் வரை கட்டண பாக்கி வைத்துள்ளதாக ஓட்டல் நிர்வாகம் புகார் அளித்த நிலையில், இப்போது அந்த மர்ம நபர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

டெல்லி லீலா பேலஸ் ஓட்டலுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முகமது ஷெரீஃப் என்பவர் வந்துள்ளார். அவர் தன்னை ஐக்கிய அரபு அமீரக அரச குடும்பத்தின் உதவியாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். சில அலுவல்கள் நிமித்தமாக ஓட்டலில் தங்க அறை வேண்டும் என்று கூறியுள்ளார். ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 20-ஆம் தேதி வரை தங்கியுள்ளார்.

ஷேக் ஃபலா பின் சயீத் அல் நஹ்யானின் அலுவலகத்தில் பணிபுரிவதாகக் கூறியதால் ஓட்டல் நிர்வாகமும் அவருக்கு அறை ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது. செக் இன் வேளையில் யுஏஇ ரெஸிடன்ட் கார்டை கொடுத்துள்ளார். அவர் கொடுத்த ஆவணங்கள் அனைத்துமே போலியானவை என்று இப்போது தெரியவந்துள்ளது.

அறை எண் 427-ல் ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 20 வரை தங்கியுள்ளார். இந்தக் காலகட்டத்தில் ரூ.11.5 லட்சம் கட்டணமாக செலுத்திய அந்த நபர், நவம்பர் 20-ஆம் தேதி எவ்வித தகவலும் சொல்லாமல் சென்றுவிட்டார். அவர் தர வேண்டிய பாக்கி ரூ.23 லட்சம். அது மட்டுமல்லாமல் ஓட்டல் அறையில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் வெள்ளி ஸ்பூன் என நிறைய பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE