கிருஷ்ணகிரி: அதிக வருவாய் கிடைக்கும் எனக் கூறி, ஓசூர் பொறியாளரிடம் ரூ.20.31 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஓசூர் ஜனகபுரிலேஅவுட்டைச் சேர்ந்தவர் குமரேசன் (42). இவர் பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 11-ம் தேதி இவரது செல்போனில் உள்ள டெலிகிராம் செயலிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.
அதில், ஆன்லைனில் குறைந்தமுதலீடு செய்து அதிக வருவாய்பெறலாம் என குறிப்பிடப் பட்டிருந்தது. அதை நம்பியகுமரேசன், அதில் குறிப்பிட்டிருந்த 4 வங்கிக் கணக்குகளில் ரூ.20 லட்சத்து 31 ஆயிரத்து 874 பணத்தைச் செலுத்தினார். ஆனால், அவருக்கு வருவாய் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவர்களைத் தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் அப் செய்யப்பட்டிருந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த குமரேசன், கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் பிரிவு போலீஸில் புகார் செய்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் காந்தி மதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.