திருவள்ளூர் | சோழவரம் அருகே நடந்த ரவுடி கொலையில் 3 பேர் கைது

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள விஜயநல்லூர், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் கமலநாதன் மகன் அஸ்வின் (28). ரவுடியான அஸ்வின் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள உறவினரை சந்திக்க அஸ்வின் வந்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த மர்ம கும்பல் அவரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்து தாக்கியது.இதில், தலை, கழுத்து, முகத்தில் பலத்த காயம் அடைந்த அஸ்வினை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து, தகவல் அறிந்த சோழவரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அஸ்வினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையுண்ட அஸ்வின் புதூரில் வசித்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 2 பேருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு உள்ளது. இதனால், அஸ்வின், கடந்த 3 மாதத்துக்கு முன்பு விஜயநல்லூரில் இருந்து புதூருக்கு இடம் மாறி சென்று உள்ளார்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று இரவு விஜயநல்லூரில் உள்ள உறவினரை சந்திக்க வந்தபோது மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே, போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சரத், வினோத், வேலப்பன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE