காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர் ஏனாத்தூர் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவன் ஒருவனும், மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் அடிக்கடி காஞ்சிபுரம்-வேலூர் புறவழிச் சாலையில் உள்ள குண்டுகுளம் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் சந்தித்து பேசுவது வழக்கம். அவ்வாறு இவர்கள் சந்திக்கும்போது மது அருந்திய நிலையில் இருவர் இருந்துள்ளனர். இவர்கள் வருவதை பார்த்த அந்த இருவரும் மேலும் 3 பேரை செல்போன் மூலம் வரவழைத்துள்ளனர். கத்தி முனையில்..போதையில் இருந்த இந்த 5 பேரும் சேர்ந்து மாணவனை தாக்கிவிட்டு, அந்த பெண்ணை கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இவர்கள் ஓடும்போது ஒருவன் விமல் என்ற பெயரிட்டு அழைத்துள்ளான். இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் பெயரை வைத்து தொடர்புடைய நபரையும், அவருடன் வந்தவர்கள் யார் என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வந்தனர்.
போலீஸ் விசாரணை இந்நிலையில் இந்த வழக்கில் மேல்கதிர்பூர் அருகே உள்ள விப்பேடு கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த தென்னரசு(19), விப்பேடு, வளர்புரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (22), விப்பேடு, விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த விமல்(எ)விமல் குமார் (25), காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(எ) மணி(23), விப்பேடு வளர்புரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்கிற ஊக்கு (20) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். இவர்கள் கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது.