டெல்லியில் பாதுகாவலரை சுட்டுக் கொன்று ஏடிஎம் வேனில் இருந்து ரூ.11 லட்சம் கொள்ளை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வடக்கு டெல்லியில் வசிராபாத் மேம்பாலம் அருகே ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் உள்ளது. இதில் பணம் நிரப்புவதற்காக ஒரு வேன் கடந்த செவ்வாய்கிழமை மாலை 4.44 மணிக்கு வந்தது.

அதில் இருந்து இறங்கிய 2 அதிகாரிகள் பணப் பையுடன் ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்தனர். வெளியில் பாதுகாவலர் நின்றிருந்தார். அங்கு முகமூடி அணிந்தபடி இரண்டு கையிலும் 2 துப்பாக்கியுடன் ஒருவர் வந்தார். அவர் முதலில் பாதுகாவலர் உதய்பால் சிங்(55) என்பவரை சுட்டார். அவர் சரிந்து விழுந்தார். இதைப் பார்த்ததும் வேன் டிரைவர் ஓட்டம் பிடித்தார்.

அதன்பின் கொள்ளையன் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்ப சென்ற இரண்டு அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியை நீட்டினார். அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை ஏடிஎம் மையத்துக்குள் சென்று பணப் பையை எடுத்து வரும்படி முகமூடி ஆசாமி கூறினார். இதனால் ஒரு அதிகாரி பணப்பையை எடுத்து வந்து கொடுத்தார். அதில் ரூ.10.78 லட்சம் பணம் இருந்தது. பணப்பையை எடுத்துக்கொண்டு, கையில் துப்பாக்கியுடன் கொள்ளையன் நடந்து சென்றான். இந்த காட்சிகள் முழுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

துப்பாக்கியால் சுடப்பட்ட பாதுகாவலர் உதய்பால் சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி முனையில் ஏடிஎம் பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி ஆசாமியை டெல்லி போலீஸார் தேடிவருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE