மகாராஷ்டிரா | டிரக் மீது சொகுசு பேருந்து மோதி விபத்து: 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அருகே வெள்ளிக்கிழமை காலையில், வேகமாக சென்ற பேருந்து ஒன்று டிரக் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: தானே மாவட்டம் அம்பர்நாத் என்ற இடத்தில் இருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு தனியார் சொகுசு போருந்து ஒன்று, அஹமத்நகர் மாவட்டத்தில் உள்ள கோயில் நகரமான ஷீரிடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து மும்பையில் இருந்து 180 கிமீ தொலைவில் உள்ள நாசிக்கின் சினார் தெஹ்சில் அருகிலுள்ள பதேர் ஷிவர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள், எழு பெண்கள், ஒரு ஆண் என பத்து பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சினாரில் உள்ள புறநகர் மருத்துவமனை மற்றும் யஷ்வந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்காலம் என்று தெரிகிறது.

விபத்து குறித்து அறிந்த அம்மாநில முதல்வர் ஏத்நாத் ஷிண்டே, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும், காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார். மேலும், நாசிக் பகுதி ஆணையரிடம் பேசிய முதல்வர், விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக ஷீரிடி மற்றும் நாசிக் மருத்துவமனைகளுக்கு மாற்றும்படியும், விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE