ஈரோடு | ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2.55 கோடி மோசடி: திருப்பூரைச் சேர்ந்தவர் கைது

By செய்திப்பிரிவு

ஈரோடு: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.55 கோடி மோசடி செய்த வழக்கில், திருப்பூரைச் சேர்ந்தவரை ஈரோடு குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த பச்சமலையைச் சேர்ந்தவர் கஸ்தூரி தேவி. ஆடிட்டர் அலுவலகத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வரும் இவருக்கு, திருப்பூர் ராயபுரத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (45) என்பவர் அறிமுகமானார். தெற்கு ரயில்வேயில் பணிபுரிந்து வரும் முக்கிய பொறுப்பில் உள்ள உயரதிகாரிகளுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அவர்களின் உதவியுடன் ரயில்வேயில் பணி வாங்கித் தர முடியும் எனவும் கூறி கஸ்தூரிதேவியை நம்ப வைத்துள்ளார்.

இதை நம்பிய கஸ்தூரி தேவி, தனது நண்பர்கள், உறவினர்கள் என 14 பேரிடம், பல்வேறு தவணைகளில் ரூ.2.55 கோடி பெற்று, நவநீதகிருஷ்ணனிடம் கொடுத்துள்ளார்.

பணம் கொடுத்தவர்களுக்கு போலியாக நியமன ஆணையைத் தயாரித்து, நவநீதகிருஷ்ணன் கொடுத்துள்ளார். திருச்சியில் பணிக்கான பயிற்சி வழங்கப்பட்டவுடன் பணியில் சேரலாம் என அவர்களை காத்திருக்க வைத்துள்ளார்.

அதன் பின்பு அவரைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், பணம் கொடுத்தவர்கள் சந்தேகமடைந்து, ரயில்வே பணி நியமன ஆணையை பரிசோதித்தனர். அது போலி எனத் தெரியவந்தது.

இதையடுத்து கஸ்தூரிதேவி மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு எஸ்பி சசிமோகனிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு எஸ்பி உத்தரவிட்டார்.

இதையடுத்து வழக்குப் பதிந்த இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீஸார், திருப்பூரில் பதுங்கியிருந்த நவநீதகிருஷ்ணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நவநீதகிருஷ்ணன் இதுவரை 14 பேரிடம் பணம் பெற்று ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் யாரேனும் ஏமாந்துள்ளனரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். தற்போது நீதிமன்ற காவலில் உள்ள நவநீதகிருஷ்ணனை காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளோம் என போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE