சென்னை: துபாய் மற்றும் இலங்கையிலிருந்து இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.10 கோடி மதிப்புள்ள 2.272 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: துபாயில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, துபாயில் இருந்து இன்று சென்னை வந்த சந்தேகத்திற்கிடமான ஆண் பயணி ஒருவரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர் தனது உடலில் மறைத்து எடுத்துவந்த ரூ.37.56 லட்சம் மதிப்பிலான 770 கிராம் 24 கேரட் சுத்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், துபாயில் இருந்து இன்று சென்னை வந்த மேலும் இரண்டு ஆண் பயணிகளிடம் நடத்திய சோதனையில், இருவரது உடலிலும் தங்கம் மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது. ரூ.73.28 லட்சம் மதிப்பிலான, 1502 கிராம் 24 கேரட் சுத்த தங்கம் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், நேற்று (ஜன.4) இலங்கையில் இருந்து சென்னை வந்த ஆண் பயணி ஒருவர் தனது உள்ளாடையில் மறைத்து ரூ.15.92 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.