செய்யாறில் காரை ஏற்றி பெண்ணை கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: செய்யாறில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வெங்கட்ராயன்பேட்டை பகுதியில் வசித்தவர் முருகன் மனைவி விஜயலட்சுமி(39). இவர், செய்யாறு புறவழிச்சாலையில் இரு சக்கர வாகனத்தில் நேற்று முன் தினம் காலை சென்றபோது, கார் மோதியதில் உயிரிழந்தார். விஜயலட்சுமி ஓட்டி சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு சென்ற கார், செய்யாறு வைத்தியர் தெருவில் நிறுத்தப்பட்டிருந்தது.

மேலும், காரில் இருந்தவர்கள் தப்பியோடியுள்ளனர். இது குறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக, 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

மதுபாட்டில்கள் விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, செய்யாறு கிடங்கு தெருவில் வசிக்கும் பிரபு(36), கொட நகர் பகுதியில் வசிக்கும் மாரி என்கிற வெங்கடேசன்(37) ஆகியோர் விஜயலட்சுமியை கார் ஏற்றி கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து பிரபு, மாரி என்கிற வெங்கடேசன் ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE