சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள நடைபாதை கடை வியாபாரிகளை மிரட்டி, மாமூல் வசூலித்ததாக கவுன்சிலரின் கணவரை தனிப்படை போலீஸார் விழுப்புரத்தில் கைது செய்தனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலை பகுதியில் 27 ஆண்டுகளாக பலர் நடைபாதை கடைகள் வைத்து துணி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களிடம் 51-வது வார்டு திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன்(32), தினமும் தலா ஒரு கடைக்கு ரூ.200 வீதம் மாமூல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. சிலர் பயந்து, ஜெகதீசனுக்கு மாமூல் கொடுத்துள்ளனர்.
சில பெண் வியாபாரிகள் மாமூல் தர மறுத்துவிட்டனர். இதனால் ஜெகதீசன் அவர்களுக்கு மிரட்டல் விடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண் வியாபாரிகள், ஜெகதீசனை கண்டித்து, கடந்த 2 நாட்களுக்கு முன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, கிழக்கு கல்லறை சாலையை சேர்ந்த நடைபாதை வியாபாரிகள் பலர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஜெகதீசன் மீது புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார், ஜெகதீசன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த ஜெகதீசன், விழுப்புரத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படை போலீஸார் அங்கு சென்று ஜெகதீசனை நேற்று கைது செய்தனர்.