ராஜபாளையம் | தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் சோதனை - லஞ்ச பணத்தோடு உதவியாளர் தப்பினார்

By அ.கோபால கிருஷ்ணன்

ராஜபாளையம்: ராஜபாளையம் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டு உதவியாளர் தப்பி ஓடிய நிலையில் தொழிலாளர் நல ஆய்வாளர் முருகன்(57) மீது வழக்கு பதிவு செய்து விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிலாளர் நல ஆய்வாளராக இருப்பவர் முருகன்(57). அங்கு துப்புரவு பணியாளராக இருக்கும் மாயப்பெருமாள்(50) என்பவர் ஆய்வாளரின் உதவியாளர் போல் செயல்பட்டு வந்தார். ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எழும்பு முறிவு மருத்துவமனையில் கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி ஆய்வாளர் முருகன் ஆய்வு செய்துள்ளார். அப்போது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட பணியாளர்களுக்கு ஊதியம் குறைத்து வழங்கியது தெரியவந்தது. ஆய்வு அறிக்கையில் மருத்துவமனை மேலாளரிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு முருகன் அலுவலகம் வந்துவிட்டார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனை மேலாளரை அலைபேசியில் தொடர்பு கொண்ட மாயப்பெருமாள், ஆய்வாளரை நேரில் சந்திக்கும்படி கூறியுள்ளார். இதையெடுத்து தொழிலாளர் நலத்துறை அலுவலகம் வந்த மருத்துவர் ஜவகரிடம், ஆய்வு அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பாமல் இருக்காமல் இருப்பதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் ஜவகர் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், ரசாயானம் பூசிய பணத்தை ஜவகரிடம் கொடுத்து அனுப்பினர். நேற்று லஞ்ச பணத்துடன் ஜவகர் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் சென்றார். அலுவலகத்திற்கு வெளியே லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான அதிகாரிகள் காத்திருந்தனர். ஆய்வாளர் முருகன் பணத்தை மாயப்பெருமாளிடம் கொடுக்க கூறினார். பணத்தை பெற்று கொண்ட மாயப்பெருமாள் அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE