வேப்பூர் | அரசுப் பேருந்து மோதி ஆட்டின் உரிமையாளர், 100 ஆடுகள் பலி

By க.ரமேஷ்

கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மேய்ச்சலுக்கு சென்ற செம்மறி ஆடுகள் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஆட்டின் உரிமையாளர் பலியானதோடு அவருக்குச் சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளும் உயிரிழந்தன.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த காசிநாதன் மகன் லட்சுமணன் என்பவர் கடந்த இருபது ஆண்டுகளாக கடலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி , உளுந்தூர்பேட்டை, பகுதியில் செம்மறி ஆடுகளை மேய்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு எலவசனூர் கோட்டையில் இருந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னூறுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்துள்ளார் அப்பொழுது லட்சுமணன் தனது இருசக்கர வாகனத்தில் ஆடுகளின் பின்னால் வந்துள்ளார் அப்பொழுது வேப்பூர் நோக்கி வரும் போது சேப்பாக்கம் மணிமுத்தாறு பாலம் அருகே பின்னால் வந்த செங்கலப்பட்டு பணிமனைக்கு சொந்தமான அரசுப் பேருந்து திருச்சி நோக்கி சென்ற்போது ஆடுகள் மீது மோதியதில் நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் தேசிய நெடுஞ்சாலையில் உடல் சிதறி உயிரிழந்தன.

பேருந்து ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்த லட்சுமணன் மீதும் மோதி அவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். அரசு பேருந்து பின்னால் வந்த அதே பணிமணையைச் சேர்ந்த மற்றொரு பேருந்து மற்றும் தனியார் பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் போலீஸார் லெட்சுமணன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் சிதறிக் கிடந்த செம்மறி ஆடுகளை சாலையோரம் அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் அரை மணிநேரத்திற்கு மேலாக போராடி போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE