சேலம் | லஞ்ச வழக்கில் சிக்கிய போலீஸ் எஸ்ஐ-க்கு ஓராண்டு சிறை

By வி.சீனிவாசன்

சேலம்: சேலத்தில் அடிதடி வழக்கில் கைதான நபரை, ஜாமீனில் விடுவிக்க நான்காயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்ஐ-க்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சேலம் ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

சேலம், கிச்சிபாளையம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ராஜேந்திரன். கடந்த 2013 -ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி அடிதடி வழக்கில் கைதான பிரகாஷ் என்பவரை ஜாமீனில் விடுவிக்க எஸ்ஐ ராஜேந்திரன் ரூ.4000 லஞ்சம் கேட்டுள்ளார். பிரகாஷ் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால் சேலம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தெரிவித்தார். இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது, பிரகாஷ் போலீஸ் எஸ்ஐ ராஜேந்திரனிடம் ரூ.4000 லஞ்சம் கொடுத்தார்.

அப்போது , அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் எஸ்ஐ ராஜேந்திரனை கையும் களவுமாக பிடித்து வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சேலம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, லஞ்ச வழக்கில் சிக்கிய எஸ்ஐ ராஜேந்திரனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ 10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE