உ.பி. அவலம் | நாய் குட்டிகளின் காது மற்றும் வாலை வெட்டி உப்பு தடவி சாப்பிட்ட போதை ஆசாமி

By செய்திப்பிரிவு

பரேலி: உத்தர பிரதேச மாநிலத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான போதை ஆசாமி ஒருவர் இரண்டு நாய் குட்டிகளின் காது மற்றும் வாலை வெட்டி கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர். அதோடு அவர் அதனை உப்பு போட்டு மதுவில் கலந்து சாப்பிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் உள்ள பரேலி மாவட்டத்தில் உள்ள ஃபரித்பூர் பகுதியின் எஸ்டிஎம் காலனியில் நடைபெற்றுள்ளது. இரண்டு நாய்க் குட்டிகளில் ஒன்றின் காதையும், மற்றொன்றின் வாலையும் அவர் வெட்டியுள்ளார். இரண்டு நாய்க் குட்டிகளுக்கும் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும். குட்டிகளின் நிலை மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதத்துவமற்ற இந்த செயலை செய்தது முகேஷ் வால்மிகி என போலீஸார் தெரிவித்துள்ளனர். நாய் குட்டிகளை அவர் வதைத்த போது அவருடன் மற்றொருவர் இருந்துள்ளார். இருவரும் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர்.

பிராணிகள் நல ஆர்வலரான தீரஜ் பதக் எனும் நபர் இது தொடர்பாக உள்ளூர் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும். குற்றச்சாட்டுக்கு ஆளானவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும் மூத்த காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE