காதலை தொடர மறுத்த மாணவியை பீர் பாட்டிலால் குத்திய இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: காதலை தொடர மறுத்த நர்சிங் மாணவியை பீர் பாட்டிலால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பத்தூரை அடுத்த பட்டரைவாக்கம் பகுதியில் தனியார் செவிலியர் கல்லூரி உள்ளது. இங்கு ஆவடி அருகே பட்டாபிராமைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் முதலாமாண்டு படித்து வருகிறார்.

இவருக்கும், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை, கருவேப்பிலைபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் (24) என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டது. இவர், சென்னையை அடுத்த கானத்தூரில் உள்ள உணவகத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 3 மாதமாக ஐயப்பனுடன் கல்லூரி மாணவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, காதலை விட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவருடன் மாணவி பேசுவதையும் நிறுத்தியதைடுத்து, ஐயப்பன் மாணவியை நேரில் சந்திக்க நேற்று முன்தினம் மாலை பட்டரைவாக்கம் செவிலியர் கல்லூரிக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து மாணவி வீட்டிற்கு செல்ல அம்பத்தூர், ஞானமூர்த்தி நகர் வழியாக வந்த அவரை ஐயப்பன் சந்தித்து பேச முயன்ற போது, அவர் பேச மறுத்து சென்றுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ஐயப்பன் சாலையில் கிடந்த காலி பீர்பாட்டிலை உடைத்து மாணவியின் கழுத்தில் குத்தி உள்ளார்.

இதில் அவர் அலறி துடித்ததை பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, அவரை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். மேலும், பொதுமக்கள் ஐயப்பனை பிடித்து தர்ம அடிகொடுத்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE