வேலூர்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லை அனுமதி பெற்ற அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பி அரிசியாக மாற்றி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த 2020-ம் ஆண்டு நெல் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக வேலூர் சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் பயன்பெறாமல் இடைத்தரகர்கள், வியாபாரிகள், அதிகாரிகள் சேர்ந்து அரசுக்கு ரூ.8 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீஸார் இதுவரை 30 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், அரக்கோணம் அடுத்த சிறுகரும்பூரைச் சேர்ந்த திமுக பிரமுகர் குமரவேல் பாண்டியன், மேல்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் குமரவேல் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். குமரவேல் பாண்டியன் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்ததாக போலியாக சிட்டா அடங்கலை கிராம நிர்வாக அலுவலர் குமரவேல் வழங்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.