சென்னை | வீட்டின் பூட்டை உடைத்து திருடியவர் கைது: 65 பவுன் நகைகள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

சென்னை: தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவர்கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 65 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை, கொளத்தூர் செந்தில் நகர் 9-வது தெருவில் வசிப்பர் பிந்தியா தேவி. இவர் கடந்த மே 26-ம் தேதி தாயாருடன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். 29-ம் தேதி அவரது உறவினர் வீட்டைப் பார்த்தபோது பிந்தியா தேவியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளேஇருந்த 23 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாகச் சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது திருட்டில் ஈடுபட்டது திருவள்ளூர் மாவட்டம், பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்ற துப்பாக்கி சேகர் (47) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

14 ஆண்டு சிறையில் இருந்தவர்: இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "கைது செய்யப்பட்ட சேகர் மீது ராஜமங்கலம் காவல் நிலையத்தில் 11 வழக்குகள், பெரவள்ளூர் காவல் நிலையத்தில் 2 வழக்குகள் உட்பட 15 வீடுகளின் பூட்டை உடைத்து பணம், தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களைத் திருடியவழக்குகள் உள்ளன. அவரிடமிருந்து 65 பவுன் நகைகள் மற்றும் 300 கிராம் வெள்ளி பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளோம். இவர் 1993-ம் ஆண்டு கொலை வழக்கில் கைதாகி 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தவர். 2007-ம் ஆண்டு வெளியே வந்துதிருட்டில் ஈடுபட்டுள்ளார். ஒருமுறை குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE