சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யாவை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கில், சதீஷை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவை (20) இளைஞர் சதீஷ் (23) கடந்த அக்டோபர் மாதம் 13-ம் தேதி மின்சார ரயில் முன்பு தள்ளி கொலை செய்தார். இந்த சோகம் தாளாமல் மாணவியின் தந்தையான கால் டாக்ஸி ஓட்டுநர் மாணிக்கம் தற்கொலை செய்துகொண்டார். தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, சதீஷை கைது செய்தனர்.
இதுகுறித்து மாம்பலம் ரயில்வே போலீஸார் விசாரித்து வந்த நிலையில், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, வழக்கு ஆவணங்களை சிபிசிஐடி போலீஸாரிடம் மாம்பலம் ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர். டிஎஸ்பிக்கள் செல்வகுமார், புருஷோத்தமன் தலைமையில் 5 பெண் காவல் ஆய்வாளர்கள் கொண்ட சிபிசிஐடி குழுவினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சதீஷை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.