கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் மூவர் கைது

By செய்திப்பிரிவு

பத்தனம்திட்டா: கேரளாவில் இரண்டு பெண்கள் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் மூவரை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதி மக்களை குலை நடுங்க வைக்கும் அளவுக்கு அரங்கேறி உள்ளது. உயிரிழந்த இரண்டு பெண்களும் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

இந்த சம்பவம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் உள்ள எலந்தூர் என்ற கிராமத்தில் நடந்துள்ளது. இரண்டு பெண்களுக்கு பணத் தேவை இருந்துள்ளது. அவர்கள் இருவரும் வாழ்வாதாரத்திற்காக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்துள்ளனர். ஆபாச படத்தில் நடித்தால் நிறைய பணம் கிடைக்கும் என அவர்களை நம்பவைத்து இந்த கொலையை கொலையாளிகள் அரங்கேற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் பெண். அந்த பெண்ணும், அவரது கணவரும், மற்றும் ஒருவருமாக சேர்ந்து இந்த கொலையை செய்துள்ளனர். இந்த கொலை அந்த தம்பதிகளின் வீட்டில் நடந்துள்ளது.

கொலையான பெண்கள் இருவரும் சொல்ல முடியாத சித்திரவதைக்கு ஆளாகியுள்ளனர். அடித்தும், உடலின் அந்தரங்க பகுதியில் கத்தியால் குத்தப்பட்டும் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்களது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இரு பெண்களில் ஒரு பெண்ணின் மார்பகங்களை கொலையாளி ஒருவர் அறுத்துள்ளார். மேலும், அவர்களது ரத்தத்தை வீட்டின் சுவர் மற்றும் தரையில் அந்த கணவனும் மனைவியும் தெளித்துள்ளனர்.

அதன்பிறகு அவர்களது உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்துள்ளனர். இரண்டாவதாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் 56 துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளது. நிதி ஆதாயத்திற்காக இந்த சம்பவம் நடந்துள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஷஃபி, பகவால் மற்றும் லைலா என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கை போலீசார் விஞ்ஞான பூர்வமாக விசாரித்து வருகின்றனர். கொலையான இரண்டு பெண்களையும் காணவில்லை என ஒரு மாதம் முன்பே புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அவர்களின் செல்போன் சிக்னல் அடிப்படையில் போலீசார் துப்பு துலக்கி உள்ளனர். 3 கொலையாளிகளையும் வரும் 26-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க எர்ணாகுளம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE