கடலூர் | பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவர் கைது: வீடியோ பதிவிட்டவரும் சிக்கினார்

By செய்திப்பிரிவு

கடலூர்: சிதம்பரத்தில் பேருந்து நிழற்குடை ஒன்றில் அமர்ந்திருந்த பள்ளி சீருடை அணிந்த ஒரு மாணவியின் கழுத்தில் சீருடை அணிந்த பாலிடெக்னிக் மாணவர் தாலி கட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரித்து, சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் குழந்தை திருமணச் சட்டப்படி வழக்கு பதிந்து தொடர்புடைய மாணவியையும் மாணவனையும் தனித்தனியே அழைத்து போலீஸார் விசாரித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று மாணவரை போலீஸார் கைது செய்தனர். மாணவி சமூக நலத்துறை இல்லத்துக்கு அனுப்பப்பட்டு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது.

இதற்கிடையே, இச்சம்பவத்தை வீடியோவாக பதிவுசெய்து, முகநூலில் பதிவிட்டகோவிலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி கணேஷ் மீது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அடையாளங்கள் தெளிவாக தெரியும் விதமாக வலைதளங்களில் பரப்பியது தொடர்பான சிறார் நீதிச் சட்டம், பெண்கள் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கிள்ளை போலீஸார் வழக்கு பதிவு செய்து பாலாஜி கணேஷை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE