சென்னை”: சென்னை சாலிகிராமம், புஷ்பாகாலனியில் வசிப்பவர் நடிகை மாயா. இவரது மகன் விக்கி என்ற விக்னேஷ்குமார் (38). இவர் அண்மையில் வழக்கு விவகாரம் தொடர்பாக சென்றபோது பணியிலிருந்த விருகம்பாக்கம் போலீஸாரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
மேலும், விருகம்பாக்கம், காந்திநகரில் வசிக்கும் டீக்கடை உரிமையாளர் சேர்மதுரை என்பவரை அவரது கடைக்குச் சென்று மிரட்டிபணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.அவர் கொடுக்க மறுக்கவே சேர்மதுரையை தாக்கி, கடையில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றதோடு கடையையும் சேதப்படுத்தியதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விக்கியை போலீஸார் கைது செய்தனர். அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. கைது செய்யப்பட்ட விக்கி விருகம்பாக்கம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்றும், இவர் மீது 8 வழக்குகள் உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.