கோவை | போக்ஸோவில் சிறுவன் உட்பட இருவர் கைது

By செய்திப்பிரிவு

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், கோட்டைபாளையத்தைச் சேர்ந்த அருண்குமார்(22) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

கர்ப்பமடைந்த சிறுமி சில தினங்களுக்கு முன்னர் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போதுதான் சிறுமிக்கு திருமணம் நடத்தப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக அன்னூர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அருண்குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து போலீஸார் அவரை கைது செய்தனர்.

இதேபோல, 17 வயது சிறுமி சமீபத்தில் மாயமானார். அன்னூர் போலீஸில் பெற்றோர் புகார் அளித்தனர். விசாரணையில், 17 வயது சிறுவன் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியை மீட்ட போலீஸார், சிறுவனை கைது செய்தனர். அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா கூறும்போது,‘‘நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சிறுவன் காப்பகத்திலும், அருண்குமார் சிறையிலும் அடைக்கப்பட்டனர்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE