நாக்கை வெட்டுவேன் என மிரட்டல் விடுத்த மதுரை மாவட்ட பாஜக தலைவர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

நாக்கை வெட்டுவேன் என மிரட்டும் வகையில் பேசியதாக மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட பாஜக தலைவர் மகா.சுசீந்திரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேகாலயா ஆளுநர் உடல்நலம் பெற வேண்டி மதுரை வேலம்மாள் மருத்துவமனை அருகில் உள்ள ஆதி மகாமுனி சிவாலயத்தில் 2 நாட்களுக்கு முன்பு ஹோமம் நடந்தது.

இதில் பங்கேற்ற மதுரை ஒருங்கிணைந்த பாஜக மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்து சமய அறநிலையத் துறையை 2 ஆகப் பிரிக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் பேசுகிறார்.

சாதுமிரண்டால் காடு கொள்ளாது என எச்சரிக்கிறேன். விளம்பரத்துக்காக இந்து மக்களைப் பிரிக்க நினைக்கும் சக்திகளுக்கு மதுரையில் நாங்கள் பாடம் புகட்டுவோம். இந்தியன், இந்து என்கிற நிலைக்கு வந்தால் அவர்களது நாக்கு இருக்காது. வெட்டி விடுவோம் எனக் கூறி உள்ளார்.

இது குறித்து சிலைமான் சார்பு ஆய்வாளர் அர்ச்சுனன் சிலைமான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் பாஜக தலைவர் மகா.சுசீந்திரன் மீது சட்டவிரோதமாகக் கூடி தகாத முறையில் பேசுதல், வாயால் கொலை மிரட்டல் விடுத்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE