உ.பி. காசியாபாத்தில் நகைக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை: கொள்ளையனை மடக்கி பிடித்த கிராம மக்கள்

By செய்திப்பிரிவு

காசியாபாத்: உத்தர பிரதேசம் காசியாபாத்தில் நகைக்கடை உரிமையாளரை, கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். தப்பியோட முயன்ற கொள்ளையன் ஒருவனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். மற்றொரு கொள்ளையனை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

உத்தர பிரதேசம் காசியாபாத்தில் லோனி என்ற இடத்தில் டிஎல்எப் பகுதியில் சகிந்தர் யாதவ்(35) என்பவர் தங்க நகைக்கடை வைத்துள்ளார். இவரது நடவடிக்கைகளை அஜய் குமார், பன்ட்டி என்ற இருவர் நீண்ட நாட்களாக கண்காணித்துள்ளனர். கடந்த திங்கள் இரவு 8.30 மணியளவில், சகிந்தர் யாதவ் தனது கடையை மூடிவிட்டு ஒரு பையுடன் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அந்த பையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தன.

இதை இரவு 7 மணி முதல் கண்காணித்து வந்த அஜய் குமார், பன்ட்டி ஆகியோர், யாதவை மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தனர். சங்கர் விகார் காலனியில் சகிந்தர் யாதவை இடைமறித்த கொள்ளையர்கள், அவரது பையை பறிக்க முயன்றனர். இதற்கு சகிந்தர் யாதவ் மறுக்கவே, அவரை துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டனர். கத்தியாலும் வயிற்றில் குத்தினர். இதில் சகிந்தர் யாதவ் சரிந்து விழுந்து இறந்தார்.

துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதும், அக்கம் பக்கத்தினர் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது சங்கர் விகார் காலனியைச் சேர்ந்த பியூஷ் என்பவர் கொள்ளையர்களை தடியால் தாக்கினார். உடனே, கொள்ளையர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனர். ஆனாலும், பியூஷ் அவர்களை தொடர்ந்து தாக்கினார். அவர்கள் கத்தியால் பியூஷை தாக்கியதில் பல இடங்களில் வெட்டு காயம் எற்பட்டது.

அதற்குள் பொதுமக்கள் ஒன்று கூடி கொள்ளையர்கள் மீது கற்கள் மற்றும் பாத்திரங்களை தூக்கி எறிந்தனர். கொள்ளையர்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பியோட முயன்றபோது, பொதுமக்கள் விரட்டிச் சென்று அஜய் குமார் என்பவனை மட்டும் பிடித்தனர். பன்ட்டி என்பவர் தப்பிவிட்டார். அவர் லோனி பகுதியில் மறைந்திருப்பதாக போலீஸாருக்கு தகவல்கிடைத்தது. போலீஸார் அங்கு சென்றபோது, பன்ட்டி இரு சக்கர வாகனத்தில் தப்பியோடினார். அவரை போலீஸார் விரட்டிச் சென்றபோது, பன்ட்டி துப்பாக்கியால் சுட்டார். போலீஸார் திருப்பிசுட்டதில் பன்ட்டியின் இரு கால்களில் குண்டு பாய்ந்தது. அவரை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

கொள்ளையர்கள் இருவரும் காசியாபாத் மற்றும் டெல்லியில் ஏற்கெனவே பல வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது 5 வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE