கர்நாடக மடாதிபதி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு

By இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஸ்ரீமுருக ராஜேந்திராமடம் மிகவும் பிரபலமானது. அண்மையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அங்கு சென்று மடாதிபதி ஸ்ரீசிவமூர்த்தி முருக ஷரணருவிடம் லிங்க தீட்சை பெற்றார். இந்நிலையில் மடத்தின் சார்பில் நடத்தப்பட்ட விடுதியில் தங்கிப் படித்த 16 வயதான 2 சிறுமிகள் அங்கிருந்து வெளியேறி மைசூருவில் உள்ள சேவா சம்ஸ்தேவில் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் கடந்த 26-ல் தஞ்சம் அடைந்தனர்.

தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியரிடம், மடாதிபதி ஸ்ரீசிவமூர்த்தி முருக ஷரணரு உட்பட 3 பேர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முறையிட்டனர். இதையடுத்து சேவா சம்ஸ்தே நிறுவனத்தினர் 2 சிறுமிகளையும் மைசூரு மாவட்ட குழந்தைகள் காப்பக குழுவின் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

அதன்பின், குழந்தைகள் காப்பக குழு உத்தரவின்படி நாசர்பாத் போலீஸார் மடாதிபதி ஸ்ரீசிவமூர்த்தி முருக ஷரணரு உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்த போது, ‘‘பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் மூன்றரை ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மற்றொரு சிறுமி ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறியுள்ளார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE