விருத்தாசலம் | சிறுவன் பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் 3 வயது சிறுமி உயிரிழப்பு: தந்தையும் சிறுவனும் கைது

By செய்திப்பிரிவு

விருத்தாசலம்: கடலூர் மாவட்டத்தில் 13 வயதுசிறுவன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதில், 3 வயது சிறுமி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் சிறுவனையும், அவரது தந்தையையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகேயுள்ள விஜயமாநகரம் புது ஆதண்டார் கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ். இவரது மகள் மலர்விழி (3). இவர், நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டுமுன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது, மங்கலம்பேட்டை அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த சிறுவன், அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீதுமோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி மலர்விழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மங்கலம்பேட்டை போலீஸார் சிறுமியின் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய சிறுவனை கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பினர். 18 வயதுக்குட்பட்ட சிறுவனிடம் இருசக்கர வாகனத்தை கொடுத்ததால் தந்தை சிவகுருவையும் போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE