மதுரை | மெக்கானிக் தற்கொலை எதிரொலி - எஸ்.ஐ.க்கு எதிராக வைரலாகும் ஆடியோ

By செய்திப்பிரிவு

மதுரையில் மெக்கானிக் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், எஸ்.ஐ.க்கு எதிராக ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

மதுரையைச் சேர்ந்தவர் கணேஷ்(34). மெக்கானிக். இவர் பெண் ஒருவரை காதலித்து 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். ஆண் குழந்தை உள்ளது.

சில மாதங்களுக்கு முன் கணவன், மனைவிக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து கணேஷின் மனைவி போலீஸில் கணவர் மீது புகார் அளித்தார். அப்போது இந்த புகாரை விசாரித்த எஸ்.ஐ. ஒருவருக்கும் கணேஷின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த கணேஷ் இருவரையும் கண்டித்தார்.

இருப்பினும் இவர்களின் பழக்கம் நீடித்தது. கடந்த 3 நாட்களுக்கு முன் கணேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்புக்கு சம்பந்தப்பட்ட எஸ்.ஐ.தான் (தற்போது உளவு பிரிவில் உள்ளார்) காரணம் என கணேஷின் குடும்பத்தினர், உறவினர்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பான புகாரை ஆய்வாளர் பூமிநாதன் விசாரிக்கிறார்.

மேலும், காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், சிறப்புக் குழு ஒன்றும் விசாரிக்கிறது. இதற்கிடையே தற்கொலைக்கு முன்பு கணேஷ் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ.யுடன் மொபைல்போனில் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதற்கிடையே சம்பந்தப்பட்ட எஸ்.ஐ. அவனியாபுரம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE