சேலத்தில் உருக்கம்: பிணவறையில் 10 மாதமாக இருந்த மனைவியின் உடலை பெற்றுக்கொண்ட வங்கதேச கணவர்

By வி.சீனிவாசன்

சேலம்: சேலத்தில் 10 மாதங்களாக பிணவறையில் வைக்கப்பட்டுள்ள மனைவி உடலை, வங்கதேசத்தில் இருந்து வந்த கணவரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

சேலம், சங்கர் நகரில் அழகு நிலையம் நடத்தி வந்த தேஜ்மேண்டல் (29). வங்க தேசத்தைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில், தேஜ்மேண்டல் நடத்தி வந்த அழகு நிலையத்தில் வேலைபார்த்த வங்கதேசத்தை சேர்ந்த லப்லு, நிஷி, மும்பையை சேர்ந்த ரிஷி ஆகியோர் பணம், நகைக்காக அவரை கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

தேஜ்மண்டல் வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதால் அவரது உடலை இந்திய தூதரகம் மூலமாக உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தேஜ்மேண்டலின் கணவர் முகமது ராக்கியிடம் (34) போலீஸார் தொடர்பு கொண்டு, அவரது மனைவி உடலை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். பண வசதியில்லாத ராக்கிக்கு, போலீஸார் பாஸ்போட், விசா எடுக்க தேவையான செலவு தொகையையும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், இந்தியாவுக்கு புறப்பட்ட முகமது ராக்கி, அஸ்தம்பட்டி காவல் நிலையம் வந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். மனைவி கொலை செய்யப்பட்ட இடத்தையும் அவர் பார்வையிட்டார். சேலம் அரசு மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள தேஜ்மேண்டலின் உடலை முகமது ராக்கியிடம் பத்து மாதங்கள் கழித்து இன்று ஒப்படைத்தனர்.

தேஜ்மேண்டல் உடலை கணவர் முகமது ராக்கி முன்னிலையில், சேலத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். வங்கதேசத்தில் இருந்து வந்த கணவர் முகமது ராக்கி, பிணவறையில் 10 மாதமாக காத்திருந்த மனைவியின் உடலை கனத்த மனதுடன் பெற்றுக் கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE