விழுப்புரம் அருகே மின் வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வேட்டையாட சென்ற போது மின் வேலியில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், அனுமதியின்றி மின்வேலி அமைத்த விவசாயியை போலீஸார் தேடி வருகின்றனர்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகதாஸ், (45), வெங்கடேசன் (44) சுப்பிரமணி (38) இவர்கள் மூவரும் வேட்டைக்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த 3 பேரும் நேற்று இரவு வேட்டைக்குச் சென்றனர்.

அந்த பகுதியில் காட்டுபன்றிகளை கட்டுப்படுத்த அதே ஊரைச் சேர்ந்த விவசாயியான பத்மநாபன் தனது நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்து இருந்தார். இதனை கவனிக்காமல் வேட்டைக்கு சென்ற 3 பேரும் நிலத்தை கடக்கும்போது மின்வேலியில் சிக்கினர்.

இதில் மின்சாரம் தாக்கி 3 பேரும் உயிரிழந்தனர். இத்தகவல் அறிந்த பிரம்மதேசம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் அனுமதியின்றி மின்வேலி அமைத்த விவசாயி பத்மநாபனை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE