பரமத்தி வேலூர் அருகே விவசாயியை கொன்று விட்டு நாடகமாடிய பெண் கைது

By செய்திப்பிரிவு

பரமத்தி வேலூர் அருகே விவசாயியை கொலை செய்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

பரமத்தி வேலூர் அருகே திடுமல் ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ் (52). இவர் கார் வாடகைக்கு விடும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இவருக்கு கலாமணி என்ற மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.

இவருக்கும் கருமகவுண்ட பாளையத்தைச் சேர்ந்த சுதா (44) என்ற பெண்ணுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுதா வீட்டில் செல்வராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்த சென்ற செல்வராஜ் மனைவி கலாமணி தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக நல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது;

சுதாவுக்கு, செல்வராஜ் மட்டுமின்றி வேறொரு நபருடன் பழக்கம் இருந்துள்ளது. இதையறிந்த செல்வராஜ் தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுதா, செல்வராஜை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதன்படி இரு தினங்களுக்கு முன்னர் வீட்டிற்கு வந்த செல்வராஜுக்கு மது கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், அவர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார் என்பது தெரிந்தது. இதையடுத்து சுதாவை போலீஸார் கைது செய்தனர். கொலையில் வேறு நபர்களுக்கும் தொடர்புள்ளதா எனவும் விசாரணை நடந்து வருகிறது, என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE