விருதுநகரில் தனியார் பேருந்து - கார் மோதி விபத்து: சென்னை தம்பதி உயிரிழப்பு; 2 குழந்தைகள் காயம்

By செய்திப்பிரிவு

விருதுநகரில் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர். குழந்தைகள் இருவர் காயமடைந்தனர்.

பழைய பெருங்களத்தூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் மனோஜ் (37). தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி நித்தாஷா (32). இவர்களுக்கு பிரனாப் ஆதித்யா (8) என்ற மகனும், ஜெனிலா (7) என்ற மகளும் உள்ளனர். தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் சுரண்டைக்கு நேற்று அதிகாலை மனோஜ் தனது குடும்பத்துடன் காரில் புறப்பட்டார்.

விருதுநகர், கோவில்பட்டி வழியாகச் செல்லத் திட்டமிட்டு, நேற்று பிற்பகல் விருதுநகர் நான்குவழிச் சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். முன்புற இருக்கையில் மகள் ஜெனிலாயும், பின்புறத்தில் நித்தாஷாவும், மகன் பிரனாப் ஆதித்யாவும் தூங்கிக்கொண்டு வந்துள்ளனர். விருதுநகர் நான்குவழிச் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, கோவில்பட்டியிலிருந்து வத்திராயிருப்பு செல்லும் தனியார் பேருந்து மீது மனோஜ் ஓட்டி வந்த கார் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் வந்த மனோஜ், அவரது மனைவி நித்தாஷா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குழந்தைகள் இருவரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற விருதுநகர் பஜார் போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த குழந்தைகள் இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மனோஜ் மற்றும் நித்தாஷா சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து விருதுநகர் பஜார் போலீஸார் வழக்குப் பதிந்து தனியார் பேருந்து ஓட்டுநரான வத்திராயிருப்பு அருகே உள்ள இலந்தைகுளத்தைச் சேர்ந்த ஞானகுரு (37) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE