சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வாகன சோதனையின்போது, ஆட்டோவில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், வட மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி: சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, திருவல்லிக்கேணி (D-1) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் நேற்று (ஜூன் 28) காலை, ஜிம்கானா கிளப் எதிரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே ஆட்டோவில் வந்த 4 நபர்களை நிறுத்தி விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் ஆட்டோவில் வந்த 4 நபர்களும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், வடமாநிலத்தில் இருந்து மேற்படி கஞ்சாவை கடத்திக் கொண்டு சென்னை வந்து, சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வாடகை ஆட்டோவில் வந்தபோது பிடிபட்டதும் தெரியவந்தது.
» ஒரு மரணமும் சில ஊடகங்களின் பொறுப்பின்மையும்
» கடைசி ஓவரை உம்ரான் மாலிக்கிடம் கொடுத்தது ஏன்? - ஹர்திக் விளக்கம்
அதன்பேரில், கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ண சாகு (29), ஜெகன் மோகன் மண்டால் (28), அர்ஜுன் மண்டல் (25), மற்றும் கங்கா மண்டல் (26) ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 நபர்களும் திமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.