போதைப் பொருள் கடத்தல் வழக்கில் விசாரணை அதிகாரி மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

போதைப் பொருள் கடத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணை அதிகாரியை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த நரேந்திரகுமார் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், என் வீட்டில் தங்கியிருந்த உறவினர் விஜயகுமார் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு திருமணமான பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு தலைமறைவாகினர். அப்பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின்பேரில் ஆர்.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்பெண்ணை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் தனது கணவருடன் செல்ல மறுத்து தனியார் மகளிர் விடுதியில் தங்கியிருந்தார். பிறகு இருவரும் மீண்டும் தலைமறைவாகி விட்டனர்.

பொய் வழக்கில் கைது

அப்பெண்ணின் குடும்பத்தினர் அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால், அந்தப்பெண் எனது உறவினருடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடிக்க நான் தான் காரணம் எனக்கூறி கடந்த மார்ச் மாதம் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக என்னை பொய் வழக்கில் கைது செய்தனர்.

தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளேன். என்மீது போடப்பட்டுள்ள வழக்கை ஆர்.கே.நகர் காவல் ஆய்வாளர் விசாரித்தால் எனக்கு நியாயம் கிடைக்காது என்பதால் இந்தவழக்கை சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதிஷ்குமார், இந்த வழக்கை நேர்மையாக விசாரி்க்க வேண்டும் என அறிவுறுத்தி விசாரணையை தண்டையார்பேட்டை காவல் ஆய்வாளருக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE