யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு நிராகரிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

கோயில் திருப்பணி எனக்கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் திருப்பணி எனக்கூறி பொதுமக்களிடம் பெரும் தொகையை நன்கொடையாக வசூலித்து மோசடி செய்துள்ளதாக ஆவடியைச் சேர்ந்த யூடியூபரான கார்த்திக் கோபிநாத்தை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு பூந்தமல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் தரப்பிலும், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்திக் கோபிநாத் தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், கார்த்திக் கோபிநாத்தின் தனிப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.சதிஷ்குமார் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்திக் கோபிநாத் தரப்பில் வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி, "ஏற்கெனவே ஜாமீனில் உள்ள நபரை போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோர முடியாது" என வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, இது தொடர்பாக போலீஸார் தாக்கல் செய்திருந்த மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோகுல கிருஷ்ணன், "குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்திக் கோபிநாத் ‘மிலாஆப்’ என்ற இணையதள கணக்கின் மூலம் வசூலித்துள்ள தொகையைத் தவிர்த்து, அவர் ரூ.3 லட்சத்துக்கும் மேல் தனிப்பட்ட முறையில் பணம் வசூலித்துள்ளார்" என்றார். அதற்கு கார்த்திக் கோபிநாத்தின் வங்கிக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்து விட்டதாக வழக்கறிஞர் ராகவாச்சாரி தெரிவித்தார். அதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதி வரும் ஜூன் 24-க்கு தள்ளி வைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE