க்ரைம்

நாமக்கல் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.4.89 லட்சம் பணம் கொள்ளை

கி.பார்த்திபன்

நாமக்கல்: நாமக்கல் அருகே தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை காஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ. 4.89 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலை பெருமாள்கோயில் மேட்டைச் சேர்ந்தவர் நடேசன். அவருக்கு சொந்தமான கட்டிடத்தில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் ஏடிஎம் மையம் திறந்திருப்பதுடன், உள்ளிருந்த இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக இது குறித்து புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் காஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 4.89 லட்சம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்று இருப்பதும், தடயங்களை மறைக்க மிளகாய் பொடி தூவப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

இதனிடையே, சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மோப்ப நாய் ஏடிஎம் மையத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது. கொள்ளை சம்பவம் குறித்து தகவலறிந்த நாமக்கல் போலீஸ் டிஎஸ்பி சுரேஷ் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து ஏடிஎம் மையங்களை சுற்றியுள்ள சிசிடிவிகளில் பதிவான காட்சிகளை கைப்பற்றி தலைமறைவான மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT