சென்னை | ஆட்டோவில் 175 கிலோ ஜர்தா புகையிலைப் பொருட்கள் பதுக்கல்: ஒருவர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை யானைகவுனி பகுதியில் தடை செய்யப்பட்ட ஜர்தா புகையிலைப் பொருட்களை ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த சீனிவாசன் என்பவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 175 கிலோ ஜர்தா புகையிலைப் பொருட்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில், "தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ், ஜர்தா உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், "புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை" (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாக கண்காணித்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், யானைகவுனி (C-2) காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (மே 1) காலை யானைகவுனி, தண்ணீர் தொட்டி தெரு அருகே கண்காணிப்பு பணியில் இருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஜர்தா புகையிலைப்பொருட்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஜர்தா புகையிலைப்பொருட்களை ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரை கைது செய்தனர். அவரது ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த 175 கிலோ ஜர்தா புகையிலைப் பொருட்கள் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சீனிவாசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE