மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளம் தம்பதி பள்ளிபாளையத்தில் தற்கொலை

By செய்திப்பிரிவு

நாமக்கல்: பள்ளிபாளையத்தில் மேற்கு வங்க தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலம் மெதின்பூரைச் சேர்ந்தவர் சுபஜித் (21). இவர் பள்ளிபாளையம் தனியார் விசைத்தறிக் கூடம் ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் மேற்குவங்கம் சென்ற சுபஜித், சம்பா ஜனா (18) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

பின்னர், பள்ளிபாளையம் திரும்பிய சுபஜித் தனது மனைவி சம்பா ஜனாவுடன் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். நேற்று காலை நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் பள்ளிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த காவல் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் தூக்கில் இறந்து தொங்கினர்.

பிரேதங்களை கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் சம்பா ஜனாவை, சுபஜித் காதல் திருமணம் செய்ததும், இதற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரியவந்தது.

இதனால் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களாக அல்லது வேறு காரணமா என பள்ளிபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE