திருச்செந்தூர் பாலியல் வழக்கு | தந்தை, 3 மகன்களை கைது செய்யாதது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை: 'திருச்செந்தூரில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தொடர்புடைய தந்தை, 3 மகன்களை கைது செய்யாது ஏன்?’ என திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸார் விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரை சேர்ந்தவர் அர்ஜுனபாண்டி. இவரது மகன்கள் கிருஷ்ணபாண்டி, பாலகிருஷ்ணன், சூரியநாராயணன். அர்ஜூனபாண்டி தனது பேத்தி முறையுள்ள உறவினரின் 16 வயது மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். அவரது மகன்களும் அந்தச் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர். இது தொடர்பாக அர்ஜூன பாண்டி, அவரது 3 மகன்கள் மீது திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி 4 பேரும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் இந்த மனுவையும் சேர்த்து இதுவரை 5 முறை முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் 2 முறை முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 2 முறை திரும்பப் பெறப்பட்டன. இந்த முறையும் மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க முடியாது.

மனுதாரர்கள் உறவினரின் 16 வயது மகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளனர். மனுதாரர்களின் முன்ஜாமீன் மனுக்கள் இரு முறை தள்ளுபடியான போதும் அவர்களை கைது செய்யவோ, வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவோ திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, மனுதாரர்கள் மீதான வழக்கில் இதுவரை எடுத்த நடவடிக்கை குறித்தும், வழக்கின் நிலை குறித்தும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஏப்.5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE