வேலூர் | வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு: தந்தை மீது போக்சோ சட்டம் பதிவு

By செய்திப்பிரிவு

வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவான தந்தையை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

வேலூர் சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணி (42). இவரது மனைவி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். பின்னர், விதவை பெண் ஒருவரை மணி 2-வது திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு ஏற்கெனவே 15 வயதில் மகள் ஒருவர் உள்ளார்.

2-வது மனைவி, அவரது மகள், மணி என அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், மணி தனது வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறி அழுதார். ஆனால், அவரது தாயார் அதை கண்டும், காணாமல் இருந்தார். இதனால், மணி தொடர்ந்து இரவு நேரங்களில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இது குறித்து சிறுமி தனது உறவினர்களிடம் கூறி, தன்னை காப்பாற்றுமாறு கேட்டுள்ளார். இதையடுத்து, சிறுமியின் உறவினர்கள் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த மணி மீது போக்சோ சட்டம் பதிவு செய்தனர். இதையறிந்த மணி, தனது 2-வது மனைவியுடன் தலைமறைவானார். அவர்களை, காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE