ஓபிஎஸ் சகோதரருக்கு எதிரான பூசாரி தற்கொலை வழக்கில் 2 கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

By செய்திப்பிரிவு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா மீதான பூசாரி தற்கொலை வழக்கில் 2 கூடுதல் அரசு வழக்கறிஞர்களை நியமிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் கைலாசப்பட்டி கைலா சநாதர் கோயிலில் பூசாரியாக பணிபுரிந்தவர் சுப்புராஜ் மகன் நாகமுத்து. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

நாகமுத்துவை தற்கொலைக்கு தூண்டி யதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா உட்பட பலர் மீது தென்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் சிறப்பு வழக்கறிஞர் மோகன் ஆஜராகி வருகிறார். இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக அரசு தரப்பில் உதவ கூடுதலாக இரு அரசு வழக்கறிஞர்களை நியமிக்கக்கோரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சி.எம்.ஆறுமுகம் வாதிட்டார். பின்னர், இந்த வழக்கில் கூடுதல் உதவி அரசு வழக்கறிஞர்களாக பரகத்துல்லா, ஏ.ராஜா ஆகியோரை நியமிக்க திண்டுக்கல் ஆட்சியருக்கு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE