திருப்பூர்: மீட்கப்பட்ட சூட்கேஸில் இருந்தது அசாம் மாநில பெண் சடலம்: இருவரை தேடி ஓசூர் விரைந்த தனிப்படை

சாக்கடை கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட சூட்கேஸில் இருந்தது அசாம் மாநில இளம் பெண்ணின் சடலம் என்பது தெரியவந்த நிலையில், இருவரை தேடி திருப்பூர் தனிப்படை போலீஸார் ஓசூர் விரைந்துள்ளனர்.

திருப்பூர் - தாராபுரம் சாலை எம்.புதுப்பாளையம் நீலிக்காடு பகுதியிலுள்ள சாக்கடை கால்வாயில், கடந்த 7-ம் தேதி சூட்கேஸ்கிடந்தது. அதில், பெண் சடலம் இருப்பதைக் கண்டு நல்லூர் போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். இளம்பெண்ணை கொலை செய்து, சூட்கேஸில் அடைத்து சாக்கடை கால்வாயில் வீசியிருப்பதும், இருசக்கரவாகனத்தில் இருவர் சூட்கேஸூடன் சுற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீஸார் விசாரித்தனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் நேகா(26) என்பதும், அந்த பெண்ணுடன் தங்கியிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் வீட்டை காலி செய்துவிட்டு சென்றதும் தெரியவந்தது. இது தொடர்பாக நல்லூர் போலீஸார் அவர்களின் அலைபேசி எண்களை கொண்டு விசாரித்தனர். அதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் ஓசூருக்கு விரைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE