சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; பொறியாளருக்கு 20 ஆண்டுகள் சிறை: கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பொறியாளருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

குளித்தலை வட்டம் தெலுங்கப்பட்டியைச் சேர்ந்தவர் ராசு என்கிற நல்லுசாமி மகன் பாரதியார்(26). தனியார் நிறுவன பொறியாளர். இவர், கடந்த 2019 ஜூன் 8 மற்றும் செப்.1 ஆகிய தேதிகளில் 14 வயது சிறுமியை மிரட்டி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுதொடர்பான புகாரின்பேரில், குளித்தலை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாரதியாரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் நேற்று காணொலி மூலம் நீதிபதி ஏ.நசீமாபானு தீர்ப்பளித்தார். அப்போது, சிறுமியை கடத்திய குற்றத்துக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல், ரூ.10,000 அபராதம், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 1 ஆண்டு தண்டனை, போக்ஸோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.50,000 அபராதம், அதை செலுத்தத் தவறினால் மேலும் 1 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும், சிறுமிக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும், அபராதத் தொகை ரூ.60,000-ஐ சிறுமியின் புனர்வாழ்வுக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE